கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி காலை முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.
படகின் மீது கடலூர் மெரைன் பொலிஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என மீனவர்களால் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
12.03.2018 அன்று அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் தொழில் நடவடிக்கைக்கு சென்றாா்கள். சிலாபத்தினை சேர்ந்த 51 அகவையுடைய மில்ராஜ் மிரண்டா, 48 அகவையுடைய இமானுவேல் மிரண்டா,24 அகவையுடைய மிதுறதன் மிரண்டா ஒரோ குடும்பத்தினை சேர்ந்த தந்தை மகன் மற்றும் தம்பி ஆகிய மூவரும் ஒரு படகில் தொழிலிற்காக சென்றுள்ளார்கள்.
இவர்கள் (12-03-2018) நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்துள்ளபோதும், கரை திரும்பாத நிலையில் மீனவர்களை காணவில்லை என நாயாற்று பகுதியினை சேர்ந்த மீனவ படகுகள் காணாமல் போன மீனவரின் படகினை தேடியும் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில்.தொடர்ந்தும் விமானப்படையின் தேடுதல், கடற்படையினரின் தேடுதல், சுழியோடிகள் கடலில் தேடிதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் எந்த முடிவும் இல்லாத நிலையில் இன்று படகு மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் தமது உறவினர்களை தேட எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள் தொடர்ந்தும் தமது உறவுகளை மீட்கும் வரை தமக்கு உதவுமாறு அரசை கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது

