7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 13 ஜூன், 2018

இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி தீக்குளிக்க முயன்ற அகதி வாலிபர்..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் உள்ள கொழும்பு பீசர்மேன் பீச் பகுதியைச் சேர்ந்த சாய் மகன் அஜய்குமார் என்ற விஜய் (30), மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாமில் வசித்துவருகிறார். இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விஜய், திடீரென தனது கையில் வைத்திருந்த கேனிலிருந்து பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துத் தற்கொலைசெய்ய முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரைத் தடுத்து, அருகில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வாலிபர் விஜய்யை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அஜய்குமார் கூறியது...''நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். வந்ததில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்துவருகிறேன்.  எனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல விரும்புவதாகப் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் என்னை அனுப்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு, கள்ளப்படகில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்றபோது, கியூ பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டேன்.

எனது வழக்கை விசாரித்த ராமேஸ்வரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பவில்லை. நான் தங்கி இருக்கும் மண்டபம் அகதிகள் முகாமிலும் போதுமான மின்வசதி இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்க பலமுறை கூறியும் அனுப்பி வைக்காததால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்'' என்று கூறியுள்ளார்.
போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தியதுடன், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்