யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனைச்
சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனையிறவில் மீண்டும் இராணுவச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனியார் வாகனங்கள் சோதனைக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை கண்டி நெடுஞ்சாலையில், நாவற்குழி பாலத்திலும்
இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள போதிலும் அதில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள்
மறிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து யாழ்.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் முதல் இந்தச் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மன்றில் முன்னிலையாகி சாட்சியம்
அளிக்குமாறு மன்று அழைப்பாணை விடுத்திருந்தது. யாழ்ப்பாணம் செல்வது பாதுகாப்பு இல்லை
என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்று கோத்தபாய கட்டளை பெற்றிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.

