7

மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்     ்    

புதன், 11 ஏப்ரல், 2018

தமிழ் தேசியத்தின் மீது தீராத வேட்கை கொண்டவன் நான்; இமானுவேல் ஆனோல்ட்

கட்சி பேதங்களுக்கு அப்பால், மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்களாக நாம் அனைவரும் இன்றுமுதல் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தனது கொள்கை விளக்கவுரையில் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று மாநகர சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அமர்வை ஆரம்பித்து வைத்து தனது கொள்கை விளக்கவுரையை வழங்கியுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களினதும் மக்களினதும் ஆத்மாக்களை நினைவில் நிறுத்தியவனாக என்று உரையை ஆரம்பித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகரின் முதன்மை மகனாக இருக்கும் எனதும் எனது கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியினதும் கொள்கை விளக்க உரை.
தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதியும் தீராத வேட்கையும் கொண்டவன் நான். அதனை நோக்கி பயணிப்பதில் உறுதியாக இருப்பவன்.
தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துகின்ற எமது பாதையும் பயணமும் கடினமானதாக இருப்பினும் அது ஜனநாயக ரீதியாகவும் மக்களின் அங்கீகாரத்துடன் கூடியதாகவும் சர்வதேச அரங்கில் மதிப்பார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.
மக்களின் விடிவுக்கான நெடிய போராட்ட வரலாற்றை கடந்து சென்றுகொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் அகிம்சை சார் மென்வலு முயற்சிகளும் போர் சார் வன்வலு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இன்றைய திகதியில் எமது மக்களும் இந்த நாடும் சர்வதேசமும் மென்வலு சார்ந்த ஜனநாயக வழிமுறைகளே சாலைச் சிறந்தது என எமக்கு மிகவும் உறுதியாகச் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.
அதுவே சிறப்பானதும் நிச்சயமானதுமாகும் என்பதே எனதும் நான் சார்ந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நம்பிக்கையாகும்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக நான் அமர்ந்திருப்பது எமது மக்களுக்கான விடிவு நோக்கி பயணத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அன்றி, வேறு நோக்கங்கள் அல்ல என்பதைனை மிகவும் ஆணித்தரமாக இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது பதவிகளும் எமக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களும் எம்மையும் எமது மக்களையும் எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்திலிருந்து திசை திருப்புமாகவிருந்தால், அந்தக் கணமே எமது பதவிகளைத் துறக்கவும் எமது அதிகாரங்களைத் தூக்கி எறியவும் நாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்பதனை இங்கு நான் குறித்துக்கொள்கின்றேன்.
மிக நீண்ட இடவெளிக்குப் பின்னர் ஜனநாயக சூழலில் எமது மண்ணிலே யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் இடம்பெற்று நாம் அனைவரும் யாழ். மாநகரின் மதிப்புக்கும் கௌரத்துக்கும் உரிய உறுப்பினர்களாகத் தெரிவாகி உள்ளோம்.
தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தோடு பல்வேறு கட்சிகளாக – குழுக்களாகப் பிரிந்து நாம் தேர்தல்களை எதிர்கொண்டோம். இப்போது இந்த அவையிலே தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளாக தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளாக நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் என்ற அடையாளம் சுமந்து வந்திருக்கின்றோம்.
இன்று முதல் கட்சி பேதங்களுக்கு அப்பால், எமது மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என பொதுவான அழைப்பை விடுத்து நிற்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம், சுத்தமான பசுமை மாநகரம் என்ற கருப்பொருளுடன் கூடிய பிரதானமான 7 விடயங்களையும் 31 துணை விடயங்களையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முன்வைத்து எமக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் கோரினோம்.
27 வட்டாரங்களுள் 14 வட்டாரங்களை பெரும்பான்மையாக வெற்றிகொள்ள எம் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஏனைய 13 வட்டாரங்களின் மக்களும் எமக்கு வாக்களித்திருந்த போதிலும் சொற்ப வாக்குகளால் அவற்றில் இருந்து எமது உறுப்பினர்கள் தெரிவாகவில்லை.
எமக்கு வாக்களித்தவர்ளையும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்தவர்களையும் யாழ்ப்பாண மாநகர மக்கள் என்ற நாம் நோக்குவோம். யாழ்ப்பாண மாநகரின் முக்கியத்துவம் எத்தகையது என்பது எம் எல்லோருக்கும் தெரிந்ததே. மாவட்டத்தின் தலைநகராக – மாகாணத்தின் தலைநகராக – வரலாற்றின் தலைநகராக – தமிழ்மொழியின் தலைநகராக அது பல்தன்மை கொண்டது.
இலங்கை மக்களாலும் உலக மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுவது. யாழ். மாநகரத்தை நாம் பார்க்கும் போது, அது இன்னும் பன்மடங்கு முன்னேற்றமடைய வேண்டும் என்ற செய்தி சொல்லிக்கொண்டிருக்கின்றது. அந்த முன்னேற்றம் இருக்கின்ற உள்கட்டமைப்புக்களில் ஏற்படும் முன்னேற்றமாக மாத்திரம் இருக்க முடியாது.
மாறாக இந்தப் பிரதேச மக்களும் அவர்களது வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் – மாநகரால் பயனுவோரை மையப்படுத்தியதாக ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரின் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல், நான் ஒரு மாணவனாக பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றேன். நிர்வாக நடைமுறைகள் – துறைகளின் செயற்பாடுகள் – மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் – கழிவகற்றல் முகாமைத்துவம் – எமது அதிகார எல்லையிலுள்ள வர்த்தகர்கள் – ஊழியர்கள் – அதிகாரிகள் – நிதிசார்ந்தவைகள் என பல்வேறு விடயங்களை நான் கற்றறிந்துகொண்டேன்.
முகாமைத்துவம் சார்ந்து எனக்கு இருக்கின்ற அறிவைக் கொண்டு இவற்றை எமது வாய்ப்புக்களாக – வளங்களாக – சவால்களாக – பிரச்சினைகளாக அடையாளம் கண்டு அவற்றைச் சிறப்பாகக் கையாளத்தக்க பொறிமுறை விரைவில் அமைக்கப்படும்.
எமது முதலாவதும் முதன்மையானதும் பணியாக மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளல் எனும் விடயம் அமையவிருக்கின்றது.
எமது 27 வட்டாரங்களுக்குமான உறுப்பினர்கள், பட்டியல் மூலம் தெரிவாகி உள்ள உறுப்பினர்கள் நிலையியற் குழுக்கள், அதிகாரிகள், ஊழியர்கள், நான் நியமிக்க இருக்கும் இணைப்பாளர்கள் – ஆலோசகர்கள், இந்தப் பிரதேச இளையோர்கள், கற்றறிந்தவர்கள் மற்றும் மதப் பெரியார்களின் துணையோடு எமது மாநகரின் நிலவும் தேவைகளையும் குறைபாடுகளையும் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய விடயங்களையும் ஒழுங்கமைத்து அதற்கேற்றால்போல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எனது திட்டமாகும். அதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றேன்.
கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்து வந்துள்ளார்கள். அவை உரியமுறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு இது விடயத்தில் முன்னெடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்கு இந்த அவை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புபட்டவை

பிரபலமான இடுகைகள்