வவுனியாவில் மனதை நெகிழச் செய்யும் வகையில் போலியாக நடித்து வீதியில் யாசகம் கேட்ட விசித்திரமான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்
அவ்வாறு வீதியில் சென்றவர்களிடம் யாசகம் கேட்ட பெண் ஒருவர் ஊடகவியலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்டு ஆலோசனைகள் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் இருந்து பெண் ஒருவர் நடக்க முடியாதவராகவும், வாய் பேச முயாதவராகவும் தன்னை உருமாற்றம் செய்து வீதியில் இருந்து அரக்கிக் கொண்டு யாசகம் கேட்டுள்ளார்.
இதனை அவதானித்த பலரது மனம் நெகிழ்ந்துள்ளதுடன், குறித்த பெண் மீது இரக்கப்பட்டு உதவியாக சிறு தொகை பணங்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன், வாகனங்களில் சென்றோரும், வாகனங்களை நிறுத்தி பணம் வழங்கினர். குறித்த பெண் வீதியில் அரக்கிக் கொண்டு சென்றதாலும், வாகனங்கள் குறித்த பெண் மீது இரக்கம் கொண்டு திடீரென நிறுத்தி உதவிகள் வழங்கியதாலும், விபத்துக்கள் ஏற்படக் கூடிய நிலை உருவாக்கியிருந்தது.
குறித்த பெண் அவ்வாறு அரக்கிக் கொண்டு சுமார் 2 கிலோமீற்றர் தூரம் சென்று குருமன்காடு சந்தியை அடைந்துள்ளார்.
போது பெண்ணின் அவல நிலை கண்டும், விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை அவதானித்தும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் என்பவர் குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த பெண்ணுடன் சைகையில் உரையாடி அப் பெண்ணின் நிலை குறித்து மாவட்ட சமூக சேவை திணைக்களத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் ஆகியோர் குறித்த பெண்ணுக்கு சக்கர நாற்காலியை வழங்கினர்.
ஆனால் குறித்த பெண் தனக்கு அது வேண்டாம் எனவும், காசு தான் வேண்டும் எனவும் அடம் பிடித்ததுடன், அவ்வாறு அரக்கிச் செல்லவே முயன்றார்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சமூக சேவைத் திணக்கள உத்தியோகத்தர்களும், ஊடகவியாளர்களும் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வீதியால் சென்ற சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றில் குறித்த பெண்ணை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

